ரயிலில் ‘பப்ஜி கேம்’ விளையாடிக்கொண்டே தண்ணீருக்கு பதில் கெமிக்கல் குடித்த இளைஞர் பலி

தினகரன்  தினகரன்
ரயிலில் ‘பப்ஜி கேம்’ விளையாடிக்கொண்டே தண்ணீருக்கு பதில் கெமிக்கல் குடித்த இளைஞர் பலி

போபால்: ரயிலில் சென்ற போது, ‘பப்ஜி கேம்’ விளையாடிக் கொண்டே, தண்ணீருக்கு பதில் கெமிக்கல் குடித்த இளைஞர் மத்தியபிரதேசத்தில் பரிதாபமாக இறந்தார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சவுராப் யாதவ் (23), தனது நண்பர் சந்தோஷ் சர்மாவுடன் குவாலியரில் இருந்து ஆக்ராவுக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். நண்பர் சந்தோஷ் சர்மா நகை தொழில் செய்பவர் என்பதால், நகைகளை சுத்தம் செய்யும் கெமிக்கலை தனது பையில் வைத்திருந்துள்ளார். இருவரும் ரயிலில் பயணம் செய்த போது தன்னுடைய செல்போனில் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்த சவுராப்புக்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது.உடனடியாக சந்தோஷ் சர்மாவின் பையில் இருந்த கெமிக்கலை எடுத்து குடித்துள்ளார். உடனடியாக மயக்கமடைந்த சவுராப், அந்த இடத்திலேயே சரிந்தார். அடுத்த சில நிமிடங்களில் பக்கத்து நிலையத்திற்கு செல்வதற்கு முன்னதாகவே சவுராப் இறந்துவிட்டார். இதுகுறித்து சவுராப் நண்பர் சந்தோஷ் சர்மா கூறுகையில், ‘‘சவுராப் தனது செல்போனில் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்தான். விளையாட்டு ஆர்வத்தில் என் பையில் இருந்த கெமிக்கலை எடுத்து குடித்துவிட்டான்’’ என்றார். இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.அவ்வப்போது ஏதாவது ஒரு மொபைல் கேம் வந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரையும் கட்டிப்போடும். சமீபத்தில் அப்படி எல்லோரையும் கட்டிப்  போட்டிருக்கிறது பப்ஜி என்ற மொபைல் விளையாட்டு. பள்ளி சிறுவர்கள் முதல்  பெரியவர்கள் வரை இந்த விளையாட்டை விரும்பி விளையாடி வருகின்றனர். இந்த  விளையாட்டுக்கு அடிமையாகி மன உளைச்சலுக்கு ஆளாகும் சம்பவங்களும் அரங்கேறி  வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை