பாரிமுனை அருகே மாடியில் தவறி விழுந்த பார் ஊழியர் பலி
தண்டையார்பேட்டை: மண்ணடியில் உள்ள அரசு டாஸ்மாக் பாரில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பணி முடிந்து சென்ற ஊழியர் திடீரென மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக பலியானார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாபு (40).
இவர் பாரிமுனை அருகே மண்ணடி பகுதியில் ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வந்தார். இவர் அந்த பாரின் 2-வது மாடியில் சக ஊழியர்களுடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வேலை முடிந்து, 2-வது மாடியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது அவர் நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்தார்.
இதில் பாபுவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அங்கு பாபுவின் உடலை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, குடிபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது அவரை வேறு யாரேனும் தள்ளிவிட்டார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
.