பாகுபாடுகளை உருவாக்கும் விதமாக குடியுரிமைத் திருத்தச்சட்ட மசோதா உள்ளது: இந்தியாவிற்கு பாகிஸ்தான் கண்டனம்

தினகரன்  தினகரன்
பாகுபாடுகளை உருவாக்கும் விதமாக குடியுரிமைத் திருத்தச்சட்ட மசோதா உள்ளது: இந்தியாவிற்கு பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத்: அண்டை நாடுகளின் மதரீதியான விவகாரத்தில் தலையிடும் வகையில் தவறான, நல்லெண்ணமற்ற நோக்கத்தோடு குடியுரிமை திருத்த மசோதாவை இந்தியா கொண்டுவந்துள்ளது என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபின் நள்ளிரவில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்கம் இந்த மசோதாவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது; இந்திய அரசு நிறைவேற்றியுள்ள பிற்போக்குத்தனமான, பாகுபாடுகளை உருவாக்கும் குடியுரிமைத் திருத்த மசோதாவை நாங்கள் கண்டிக்கிறோம். அனைத்து சர்வதேச விதிமுறைகளையும், ஒப்பந்தங்களையும் இந்த மசோதா மீறியுள்ளது. தவறான, நல்லெணமற்ற நோக்கத்தில் அண்டை நாடுகள் விவகாரத்தில் இந்தியா தலையிடும் முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது. சர்வதேச மனித உரிமைகளை முழுமையாக மீறியும், மதரீதியாகவே அல்லது நம்பிக்கை சார்ந்த அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என்ற சர்வதேச உடன்படிக்கைகளை மீறி இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை