டெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு மாணவர்கள் மீது போலீஸ் தடியடி

தினகரன்  தினகரன்
டெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு மாணவர்கள் மீது போலீஸ் தடியடி

புதுடெல்லி: டெல்லியில், பல்கலைக்கழக விடுதிக் கட்டண உயர்வுக்கு எதிராக, ஜனாதிபதி மாளிகை நோக்கி  பேரணி சென்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் (ஜே.என்.யூ) மீது  போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு  ஏற்பட்டது. ஜவஹர்லால்  நேரு பல்கலைக்கழக மாணவர்கள், விடுதி கட்டணம் திடீரென 300 சதவீதம்  உயர்த்தப்பட்டதை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  கடந்த ஒரு மாத காலமாகியும், இதில் எந்த முடிவும் இதுவரை  எடுக்கப்படாததால், இறுதிகட்டமாக ஜனாதிபதிக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம்  எழுதினர். ஆனாலும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததால்  ஜேஎன்யு பல்கலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்று  ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டும் முடிவை எடுத்தனர்.  பல்கலையின்  விசிட்டர் என்கிற முறையில், விடுதிக் கட்டண உயர்வு விவகாரத்தில் ஜனாதிபதி  தலையிட்டு பிரச்னைக்கு தீர்வுகாண கேட்டுக்கொள்ள வேண்டும் என முடிவு  செய்தனர். இதற்காக பல்கலையில் மாணவர்கள் நேற்று ஒன்று திரண்டனர். இதையடுத்து ஏராளமான  போலீசார் குவிக்கப்பட்டனர். பிகாஜி  காமா பிளேஸ் மெட்ரோ நிலையம் அருகே தடுப்புகள் அமைத்து மாணவர்கள் முன்னேற  விடாமல் ேபாலீசார் தடுத்தனர். எனினும், சில மாணவர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு  மேலேறி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும்  இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.  நிலைமையை சமாளிக்க  போலீசார் திடீரென மாணவர்கள் மீது தடியடி பிரயோகம் செய்து விரட்டினர்.  இதனால் மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.

மூலக்கதை