கர்நாடக இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தார் பாஜக முதல்வர் எடியூரப்பா

தினகரன்  தினகரன்
கர்நாடக இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தார் பாஜக முதல்வர் எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பாஜக முதல்வர் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்துள்ளார். பெரும்பானமைக்கு தேவையான 6 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக மேலும் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 8 மணிக்கு 15 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. இதில், பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில் 1  இடத்தில் மஜத முன்னிலை வகிக்கிறது. மேலும் 2 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. தற்போதுள்ள உள்ள நிலை நீடித்தால் வாக்கு எண்ணிக்கை இறுதியில் பாஜக ஆட்சிக்கு எந்த சிக்கலும் ஏற்படாது எனத் தெரிகிறது.முன்னதாக கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அளித்த ஆதரவை, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளைச் சேர்ந்த 17 அதிருப்தி எம்எல்ஏக்களும் திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை அடுத்து காலியான இடங்களில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் 15 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இடைத்தேர்தலை சந்தித்து இருந்தது. 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.இந்த நிலையில் இன்று இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய முதலே பாஜக முன்னிலை வகித்து வந்த நிலையில் அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல்வர் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை