குழந்தையில்லாததால் தகராறு: கணவன், மனைவி தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
குழந்தையில்லாததால் தகராறு: கணவன், மனைவி தற்கொலை

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-21 நாவலர் தெருவை சேர்ந்தவர் ரஜினி முருகன் (47). இவர் தீவிர ரஜினி ரசிகர்.

இவரது மனைவி சாந்தி (36). இவர்களுக்கு திருமணமாகி கடந்த 10 வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் கணவன்- மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சாந்தி, கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து இறந்தார்.

நள்ளிரவில் ரஜினி முருகன் வீட்டுக்கு திரும்பிய போது மனைவி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரும் வீட்டிக்குள் சென்று கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று ரஜினிமுருகனின் தந்தை நாராயணன், ரஜினி முருகனின் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு கிடந்தது.

இதையடுத்து அவர், கதவை தட்டிப்பார்த்தும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினரை அழைத்து அவர்கள் உதவியுடன் ஜன்னலை உடைத்தார். இதன் வழியாக பார்த்த போது மகனும், மருமகளும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன் (60). இவரது மனைவி தனலட்சுமி (58).

பாண்டியன் சொந்தமாக கூழையனூரில் ஸ்டுடியோ நடத்தி வந்தார். தொழில் நஷ்டமடைந்ததால் பணப்பிரச்னையால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

மனமுடைந்த கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் பாலில் விஷத்தை கலந்து குடித்தனர்.

இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

.

மூலக்கதை