மும்பையில் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மும்பையில் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்

மும்பை: பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேன்டி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார். இந்தியாவின் நைட்டிங்கேல் என்றழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் (90) இந்தி உள்பட 36 இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டு மொழிகளிலும் சுமார் 30 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார்.

பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகள் பெற்ற இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப்பை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் கடந்த 11ம் தேதி அதிகாலை 2 மணியளவில் மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் ஆரம்பத்தில் தெரிவித்தனர். பின்னர், அவரது உடல்நிலை சற்று தேறியது.

தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் நேற்று டிஸ்சார்ஜாகி வீடு திரும்பினார். 28 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பிய மகிழ்ச்சியை தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

அதில், ‘நான் நலம் பெற அருளிய தெய்வங்களுக்கும் பிரார்த்தித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

.

மூலக்கதை