அளவீடு பணி! புதிய மேம்பாலம் அமைக்க ... வில்லியனுார் சங்கராபரணி ஆற்றில்
வில்லியனுார் : புதுச்சேரி-விழுப்புரம் சாலையை இணைக்கும் ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் அமைப்பதற்கு அளவீடு பணி நடந்தது.
புதுச்சேரி- விழுப்புரம் சாலையில், இந்திரா சதுக்கத்தில் துவங்கி விழுப்புரம் வரையில் சாலையை அகலப்படுத்தும் பணிக்கான 'லெவல்' அளவிடும் பணி நடந்து வருகிறது.புதுச்சேரி-விழுப்புரம் சாலை பல்வேறு இடங்களில் குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது விபத்துகள் நடந்து வந்தது. அதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் அரும்பார்த்தபுரம் துவங்கி பங்கூர் வரையில் 14 மீட்டர் அகல சாலையாக மாற்றி அமைத்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி, ரெட்டியார்பாளையம், அரும்பார்த்தபுரம், வில்லியனுார், கண்டமங்கலம் வழியாக விழுப்புரம் செல்லும் தற்போது உள்ள (என்.எச் 45) தேசிய நெடுஞ்சாலையை, மேலும் அகலப்படுத்தி புதிய சாலை அமைப்பதற்கு 'லெவல்' அளவிடும் பணியை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம்-புதுச்சேரியை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள வில்லியனுார் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே நவீன வசதிகளுடன் கூடிய புதிய மேம்பாலம் அமைப்பதற்கான லெவல் அளவிடும் பணி நடந்தது.
புதுச்சேரி இந்திரா சதுக்கம் துவங்கி, எம்.என் குப்பம் வரையில் சாலை அகலப்படுத்தவும் மற்றும் புதிய மேம்பாலம் அமைப்பதற்கும் 'லெவல்' அளவிடும் பணிசெய்து முடிக்கப்பட்டுள்ளது.