ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை சட்டத்தை மீறிய பாஜ அரசு நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை சட்டத்தை மீறிய பாஜ அரசு நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை தொடர்பான சட்டத்தை மீறிய பாஜ அரசு மீது வழக்கு தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமாகிய மு. க. ஸ்டாலின் அறிக்கை: ‘சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தைச் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை போதிய ஜிஎஸ்டி வருவாய் இல்லாததால் வழங்க முடியாது’ என்று மத்திய பாஜ அரசு கைவிரித்துள்ளதை, அதிமுக அரசும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், நிதியமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் இருக்கும் ஓ. பன்னீர்செல்வமும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி. எஸ். டி சட்டத்தை செயல்படுத்துவதால், உற்பத்தி செய்யும் மாநிலங்களின் வருவாய் பாதிக்கப்படும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மாநில அரசுகள் முன் வைத்தன.

திமுகவும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியது. அப்போது, ‘ஜி. எஸ். டி சட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் இழப்பீடு ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுகட்டப்படும்.

குறிப்பாக இரு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்’ என்று மத்திய பா. ஜ. க. அரசு பொது வெளியிலும், சட்டரீதியாக நாடாளுமன்றத்திலும் உறுதியளித்தது.

அந்த வாக்குறுதியை நம்பித்தான் பல்வேறு மாநிலங்களும் தங்கள் சட்டமன்றத்தில் ஜி. எஸ். டி. அரசியல் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தன.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, உயிருடன் இருந்தவரை எதிர்த்த இந்த ஜி. எஸ். டி சட்டத்தை, பின்னர் ஆதரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பா. ஜ. க. அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜி. எஸ். டி சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்பு வைத்து நிறைவேற்ற முனையும் போது - அ. தி. மு. க. எப்படி இந்த மசோதாவை முதலில் எதிர்த்தது என்ற விவரங்களை எல்லாம் எதிர்க்கட்சித்  தலைவர் என்ற முறையில் விளக்கிக் கூறி - “வணிகர்களை, மாநில நிதி உரிமையைப் பாதிக்கும் இந்த சட்டத்தை அவசரகோலத்தில் நிறைவேற்ற வேண்டாம்.

தேர்வுக் கமிட்டிக்கு அனுப்புங்கள்” என்று எவ்வளவோ வலியுறுத்திக் கேட்டேன். எனது கோரிக்கையை நிராகரித்து விட்டு, அன்றைக்கு ஜி. எஸ். டி.

சட்டத்திற்கு அ. தி. மு. க. அரசு ஒப்புதல் அளித்தது.

ஆனால் ஜி. எஸ். டி.

சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் 9,270 கோடி ரூபாய் இழப்பீடு பற்றி அ. தி. மு. க. அரசு சிறிதும் அக்கறை காட்டவில்லை.

பிறகு, 2019-20ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் “ஜி. எஸ். டி மற்றும் இழப்பீடு வகையில் சுமார் 5,909 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ளது” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தத் தொகை பெறப்பட்டதா?.

ஜி. எஸ். டி சட்டத்தால் மாநிலத்திற்கு இதுவரை ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு?. அதில் இதுவரை மத்திய அரசிடமிருந்து பெற்றது எவ்வளவு?. நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? உள்ளிட்ட எது பற்றியும் அதிமுக அரசு வெளிப்படையாகப் பேச மறுக்கிறது.

ஜி. எஸ். டி. சட்டத்தால் இதுவரை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு? வராமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், முதலமைச்சரும், நிதியமைச்சரும் ஒளிவு மறைவின்றி உடனடியாக வெளியிட வேண்டும்.

ஏற்கனவே அதிமுக ஆட்சியின் மோசமான நிதி மேலாண்மையால், 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடி ரூபாய் கடன் வலையில் சிக்கி, மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் நிதி நிலைமையில், “ஜி. எஸ். டி இழப்பீட்டையும்” சுமையாக ஏற்றி வைத்து - கஜானாவை காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், முதலமைச்சரும் - துணை முதலமைச்சரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது.

ஆகவே, மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையைப் பெறுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். “மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும்” என்ற வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய பா. ஜ. க.

அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்டிடவும் - ஜி. எஸ். டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிடவும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை