பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: நிர்மலா சீதாராமன்

தினகரன்  தினகரன்
பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: நிர்மலா சீதாராமன்

டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கத் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வளர்ச்சிக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஹெச்.டி. தலைமை உச்சி மாநாட்டில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசுகையில், “ஆகஸ்ட் - செப்டம்பர் காலகட்டத்தில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நுகர்வுத் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் பொதுத் துறை வங்கிகள் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கியுள்ளன. உள்கட்டுமானத் திட்டங்களில் முதலீட்டைப் பெருக்குவது உள்ளிட்ட பணிகளில் அரசு அதிகக் கவனம் செலுத்துகிறது” என்றார். சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் அதிக வரி வசூல் இருப்பதாகவும், வரி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளதா என்று நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், வரிக் குறைப்பு குறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்கும் என்று பதிலளித்தார். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, பெரும்பாலான தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கின. தற்போது நிலைமை சீராகியிருந்தாலும், ஜிஎஸ்டி வரிக் குறைப்பு குறித்த கோரிக்கைகள் பலமாக இருக்கின்றன. பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவதற்கான கோரிக்கைக்கும் மத்திய அரசு இணங்கவில்லை. ஜிஎஸ்டியின் கீழ் வசூலிக்கப்படும் வரி வருவாயும் குறைவாகவே இருக்கிறது.

மூலக்கதை