அம்பத்தூரில் பெண்ணுக்கு மிரட்டல்: வாலிபருக்கு வலை
அம்பத்தூர்: காதலித்த பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அம்பத்தூர், விஜயலட்சுமிபுரத்தை சேர்ந்த 25 வயது பெண், பி. டெக் முடித்துவிட்டு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அம்பத்தூர், பள்ளம் தெருவை சேர்ந்த தீபக் சுவாமிநாதன் (28) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலிக்க ஆரம்பித்தனர். வடபழனியில் தீபக், செல்போன் கடை நடத்தி வருகிறார்.
தனது காதலை வெளிப்படுத்தி அந்த பெண்ணிடம் தீபக் கொஞ்சம், கொஞ்சமாக ரூ. 1. 50 லட்சம் வரை வாங்கியுள்ளார். இதன்பிறகு தீபக் சுவாமிநாதனின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்பதால் அவரிடம் இருந்து அந்த பெண் விலகி வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைதளப் பக்கங்களில் வெளியிடுவேன் என தீபக் சுவாமிநாதன் மிரட்டியிருக்கிறார்.
இதுகுறித்து அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் அந்த பெண் புகார் கொடுத்தார். இந்த புகார், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து தீபக் சுவாமிநாதனை தேடி வருகின்றனர்.