‘பேபி பவுலர்’ பும்ரா....சொல்கிறார் ரசாக்
லாகூர்: ‘என்னைப் பொறுத்த வரை இந்திய அணியின் பவுலர் ஜஸ்ப்ரீத் பும்ரா, பேபி பவுலர்தான். அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் கூறியுள்ளார். லாகூரில் நேற்று செய்தியாளர்களிடம் அப்துல் ரசாக் கூறுகையில், ‘‘நாங்கள் ஆடிய காலத்தில் மெக்ராத், வாசிம் அக்ரம் உள்ளிட்ட திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர்.
அவர்களது பந்துவீச்சையே எதிர்கொண்டு ஆடியிருக்கிறேன். அதனால் பும்ரா எல்லாம் எனக்கு குழந்தை மாதிரி. என்னைப் பொறுத்தவரை அவர் ‘பேபி பவுலர்’ தான்.
அவரது பந்துவீச்சை என்னால் எளிதாக எதிர்கொள்ள முடியும்’’ என்று தெரிவித்தார். ஆனால் பாக்.
கிரிக்கெட் ரசிகர்களே, ரசாக்கின் இந்தப் பேட்டியை விமர்சித்து வருகின்றனர். ‘ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரசாக்கின் சராசரியே 30 ரன்களுக்கும் குறைவுதான்.
ஏதோ சில போட்டிகளில் நன்றாக ஆடியிருக்கிறார்.
அதற்காக பும்ராவின் பந்துவீச்சு குறித்து இப்படி சொல்வதெல்லாம் ஓவர்’ என்று கூறி வருகிறார்கள். பாகிஸ்தானில் விராட் கோஹ்லிக்கும், பும்ராவுக்கும் அதிக எண்ணிக்கையில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.