டிவில்லியர்ஸ், கோஹ்லி அடித்த பந்தை காணவில்லை எங்களுக்கும் ஒரு உதவி பண்ணுங்க: ‘நாசா’விடம் பெங்களூரு அணி கோரிக்கை
பெங்களூரு: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் படக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகளில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்று. அந்த வகையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை பெங்களூரு அணி ஒருமுறை கூட கோப்பை வென்றதேயில்லை.
இந்நிலையில், இந்தியாவின் சந்திரயான் - 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியன் என்பவர் கொடுத்த தகவல் அடிப்படையில் அமெரிக்காவின் ‘நாசா’ கண்டுபிடித்தது.
நாடு முழுவதும் சண்முக சுப்ரமணியன் மற்றும் நாசாவை மக்கள் பாராட்டி வரும்நிலையில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் நாசாவிடம் வேடிக்கையான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.
இதுதொடர்பாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நாசா குழுவினரே.
அப்படியே எங்களுக்கும் ஒரு உதவி பண்ணுங்க! டிவில்லியர்ஸ், விராட் கோஹ்லி ஆகியோர் அடித்த பந்தை கண்டுபிடித்து கொடுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.
பெங்களூரு நிர்வாகத்தின் இந்த ட்வீட்டை பார்த்து கடுப்பான ரசிகர்கள், ‘பந்தை தேடுவதற்கு முன்பாக பெங்களூரு அணி எப்படி வெற்றி பெற வேண்டும்? என சொல்லிக்கொடுங்கள்’ என்று பலவாறாக கிண்டலடித்து வருகின்றனர்.