ஜார்க்கண்டில் 2வது கட்ட தேர்தல் அமித்ஷா , ராகுல் தீவிர பிரசாரம்

தினமலர்  தினமலர்
ஜார்க்கண்டில் 2வது கட்ட தேர்தல் அமித்ஷா , ராகுல் தீவிர பிரசாரம்

சக்ரதார்புர் : ஜார்க்கண்டில், இரண்டாவது கட்டத் தேர்தல் பிரசாரத்தில், பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, அமித் ஷா, காங்., - எம்.பி., ராகுல் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில், ரகுபர்தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, 81 சட்டசபை தொகுதிகளுக்கு, ஐந்து கட்டங்களாக, வரும், 20 வரை தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக, 13 தொகுதிகளுக்கான தேர்தல், நவ.,30ல் முடிந்தது. அடுத்து, 20 தொகுதிகளுக்கான, இரண்டாம் கட்ட தேர்தல், வரும், 7ல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சக்ரதார்புர் மற்றும் பஹரகோரா பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில், அமித் ஷா பேசியதாவது:ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ், நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை ஒழித்து, லஞ்ச ஊழலற்ற ஆட்சியை தந்து, மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அரசியலில், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளார். மத்திய - மாநில அரசுகள் இணைந்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. தியோகரில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

அடுத்து, போகாரோ, தும்கா, ஜாம்ஷெட்பூரில், விமான நிலையங்கள் வர உள்ளன. பயிர் காப்பீடு திட்டத்தில், 20 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று உள்ளனர். பா.ஜ., அரசு, ஐந்தாண்டு ஆட்சியில், ஜார்க்கண்ட் வளர்ச்சிக்கு பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. 55 ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்., என்ன செய்தது என்பதை, ராகுல் சொல்ல முடியுமா? காங்., ஆட்சி செய்தபோது, தனி மாநிலம் கோரி போராடிய மாணவர்கள் மீது, அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது; தடியடி நடத்தப்பட்டது.

அப்போது போராடிய, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர், ஹேமந்த் சோரன், தற்போது, காங்., ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியுடன், முதல்வர் பதவியை பிடிக்க ஆசைப்படுகிறார். இந்த, சந்தர்ப்பவாத கூட்டணி, மாநில வளர்ச்சிக்கு எதையும் செய்யாது என்பது மக்களுக்குத் தெரியும்.வரும், 2024 பொதுத் தேர்தலுக்குள், தேசிய குடியுரிமை பதிவேடு பணி முழுவதுமாக முடிக்கப்படும். சட்டவிரோதமாக குடியேறியோர், வெளியேற்றப்படுவர். இவ்வாறு அவர் பேசினார்.

சிம்டேகா பகுதியில் நடைபற்ற பொதுக்கூட்டத்தில், ராகுல் பேசியதாவது: எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்வோம். காங்., ஆளும் சத்தீஸ்கர் போல, ஜார்க்கண்டில் பல புதிய திட்டங்களை நிறைவேற்றி, மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவோம். இவ்வாறு, அவர் பேசினார்.

மூலக்கதை