அ.தி.மு.க., அரசின் முகத்தில் கரி பூசப்படும்: ஸ்டாலின்

தினமலர்  தினமலர்
அ.தி.மு.க., அரசின் முகத்தில் கரி பூசப்படும்: ஸ்டாலின்

சென்னை : 'உள்ளாட்சி தேர்தலில்அ.தி.மு.க. அரசின் முகத்தில் கரியைப் பூச தி.மு.க.வும் கூட்டணி கட்சியினரும் மக்களும் தயாராக உள்ளனர்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:முதல்வர் பழனிசாமிக்கு எடுபிடியாக மற்றொரு பழனிசாமியின் தலைமையில் இயங்கும் மாநில தேர்தல் ஆணையம் பச்சோந்தியாக மாறி விட்டது. இது எந்த விதிகளையும் கடைபிடிக்கவில்லை.நகர்ப்புற அமைப்புகளை தவிர்த்து டிச.27, 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடக்கும் என அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.

'ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தலை நடத்துங்கள்' என மாநில தேர்தல் ஆணையத்திடம் முதல்வர் பழனிசாமி கெஞ்சிக் கூத்தாடி இருப்பது மக்களை சந்திக்க அவருக்குள்ள அச்சத்தையும் மன நடுக்கத்தையும் காட்டுகிறது.ஜனநாயகத்தின் மீது தி.மு.க. உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறது. எனவே பொங்கலுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன் 1000 ரூபாய் வினியோகம் போன்ற எத்தனை அதிகார துஷ்பிரயோகங்களையும் தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும் சந்திக்கும்.மக்களின் பேராதவுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் மாபெரும் வெற்றியை குவித்து அ.தி.மு.க. அரசின் முகத்தில் கரியைப் பூச தி.மு.க.வும் கூட்டணி கட்சியினரும் மக்களும் தயாராக உள்ளனர்.

மேலும் அனைத்து தரப்பு மக்களும் மழையால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கவனக் குறைவும் அலட்சியமும் நீடித்தால் 2015ல் சென்னையில் ஏற்பட்ட செயற்கைபெருவெள்ளத்தை போன்ற சூழலை தமிழகம் சந்திக்க வேண்டிய அவல நிலை உருவாகி விடும்.அந்த நிலை இனியொரு காலத்திலும் உருவாகி விடக்கூடாது. வருவாய் துறை உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத் துறை அதிகாரிகளும் முழுவீச்சில் செயல்பட வேண்டியதை அரசுஉறுதிப்படுத்த வேண்டும்.

தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரவர் பகுதிகளில் மழையால்பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனே செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

மூலக்கதை