நவம்பரில் அதிகரித்தது தயாரிப்பு துறை உற்பத்தி வேலை இழப்பு 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு
புதுடில்லி:கடந்த நவம்பர் மாதத்தில், நாட்டின் தயாரிப்பு துறையின் உற்பத்தி, ஓரளவு அதிகரித்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், நவம்பர் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, இந்தாண்டு நவம்பர் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, பி.எம்.ஐ., குறியீடு, 51.2 புள்ளிகளாக உள்ளது.இது, அக்டோபரில், 50.6 புள்ளிகளாக இருந்தது. அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நவம்பரில் ஓரளவு வளர்ச்சி பெற்றுள்ளது.
பி.எம்.ஐ., குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.
விற்பனை குறைவுஇவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுஉள்ளதாவது:தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, அக்டோபரை விட, நவம்பரில் ஓரளவு அதிகரித்துள்ளது. ‘ஆர்டர்’கள் மற்றும் உற்பத்திக்கான வளர்ச்சி ஆகியவை சிறிது அதிகரித்திருப்பதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
சவாலான பொருளாதார நிலை காரணமாக விற்பனை குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், வேலை இழப்பை பொறுத்தவரை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.சில நிறுவனங்கள், தேவையை வலுவாக்கி, புதிய ஆர்டர்களை எடுப்பதில் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால், மற்ற நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலை, சந்தை போட்டி, வாகன துறையில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் ஆகியவை காரணமாக, போராட வேண்டிய நிலையை சந்தித்தன.இருப்பினும், அக்டோபரில் குறிப்பிடத்தக்க வகையில், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்திருந்த நிலையில், நவம்பரில் முன்னேற்றம் ஏற்படத் துவங்கி இருக்கிறது.
தேவை குறைவு
ஆனாலும், நடப்பு ஆண்டு துவக்க நிலையோடு ஒப்பிடும்போது, தொழிற்சாலை ஆர்டர்கள், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவை இன்னும் பின்தங்கியே உள்ளன.இதற்கு, தேவை குறைந்ததே முக்கியமான காரணமாக அமைந்தது.புதிய ஆர்டர்களும், தயாரிப்பும் பரவாயில்லாத நிலையில் இருந்தாலும், நிறுவனங்களில் வேலை இழப்பு, 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு, நவம்பரில் அதிகரித்து உள்ளது.
பல நிறுவனங்கள், இருக்கும் ஊழியர்களை பயன்படுத்தி வேலையை மேற்கொண்டுள்ளன. சில நிறுவனங்கள், பணி ஓய்வு பெற்றவர்களின் காலி இடங்களை நிரப்பவில்லை.அதேபோல், ஒப்பந்த தொழிலாளர்களின் பணிக்காலத்தை அவை நீட்டிக்கவும் இல்லை.பணவீக்கத்தைப் பொறுத்தவரை, உள்ளீட்டு பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட்கள் ஆகியவற்றுக்கான விலை சிறிது அதிகரித்துள்ளது.