தோனி விளையாட வருவாரா? மாட்டாரா? ரெண்டும் கெட்டான் நிலையில் பிசிசிஐ...2020 மார்ச் வரை காத்திருக்க வேணுமாம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, உலகக் கோப்பை தொடருக்கு பின்பு வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்கவில்லை. இதற்கிடையே, ‘தோனியின் ஆட்டம் உலக கோப்பை போட்டியோடு முடிந்தது; இனி தோனி விளையாட மாட்டார்’ என்று பல தகவல்கள் வெளிவந்தன. சில நாட்களுக்கு முன்பு தோனி, ஜார்க்கண்ட் மைதானத்தில் பயிற்சி செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
அதனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தோனி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான வீரர்கள் பட்டியலிலும், தோனியின் பெயர் இடம்பெறவில்லை.
ஆனால், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பங்களாதேஷில் ஆசியா லெவன் அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்டு லெவன் அணிக்கும் இடையே இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில், ஆசிய கிரிக்கெட் அணிகளை சேர்ந்த வீரர்கள் ஆசிய அணியில் இடம்பெற உள்ளனர்.
இதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் சார்பாக சில இந்திய வீரர்கள் விளையாட அனுமதி கோரப்பட்டுள்ளது. அதன்படி தோனி, விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆசிய லெவன் அணியில் விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பிசிசிஐ அனுமதி கொடுக்கும் பட்சத்தில் 2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பாக மீண்டும் தோனி கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், ‘‘அடுத்த ஐபிஎல் தொடர் முடியும் வரை பொறுத்திருங்கள்.
ஐபிஎல் தொடர் முடியும் போது, 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கப் போகும். அப்போது 15 வீரர்கள் யார் யார் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிடும்’’ எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
இதன்மூலம், அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 தொடரில் தோனியை சேர்ப்பது குறித்து, பிசிசிஐ இருவிதமான மனநிலையுடன்தான் இன்னமும் உள்ளது.