தொல்லை தந்த நபர்: போலீசில் புகார் செய்த பார்வதி

தினமலர்  தினமலர்
தொல்லை தந்த நபர்: போலீசில் புகார் செய்த பார்வதி

‛பூ, மரியான்' படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி. தனக்கு தொல்லை கொடுத்த ஒருவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். கிஷோர் என்னும் அந்த நபர் பார்வதியின் சகோதரருக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமாகினார். சமீபத்தில், பார்வதி ஒரு மாபியா கும்பலால் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாகவும் அவரை தான் காப்பாற்ற விரும்புவதாகவும் பார்வதியின் சகோதரரிடம் பொய் தகவலை கூறியுள்ளார்.. இதில் உண்மை தன்மை இல்லாததால் அவருடன் பேசுவதை பார்வதியின் சகோதரர் துண்டித்தாலும், பலமுறை குறுஞ்செய்திகளை வாட்ஸ்-அப், பேஸ்புக் மூலமும் அனுப்பினார்.

அதைத்தொடர்ந்து பார்வதியின் சகோதரர் அவருடனான தொடர்பை துண்டித்தார். திடீரென ஒருநாள் எதிர்பாராத விதமாக பார்வதியின் வீட்டிற்கு அவரை தேடி வந்த கிஷோர் அவரது தந்தையுடன் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு தங்கள் வீட்டிற்கு வரவேண்டாம் என கிஷோரை பார்வதியின் பெற்றோர் துரத்தி விட்டனர். இந்த நிலையில் தான் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையில் புகார் அளித்துள்ளார் பார்வதி.

இதுபற்றி அவர் கூறும்போது, 'ஒருவரை சட்டத்திற்கு புறம்பாக தீய எண்ணத்துடன் பின் தொடர்ந்தால் அதற்கு மிகவும் கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை.. இதுவே பல பெண்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதற்கு காரணமாக அமைகிறது.. சிலர் தவறான முடிவுகளையும் தேடிக்கொள்கிறார்கள்.. இது ஒரு மிக பயங்கரமான அனுபவம்” என்று கூறியுள்ளார் பார்வதி.

மூலக்கதை