கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு...இடைக்கால தடை!

தினமலர்  தினமலர்
கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு...இடைக்கால தடை!

சென்னை:கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 'கோவில் நிலங்களில், எத்தனை ஆக்கிரமிப்புகள் உள்ளன; அவற்றை அகற்றாத அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன' என்பது உள்ளிட்ட விபரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்யவும், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், கன்னன்குறிச்சியைச் சேர்ந்த, ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:வருவாய் துறை பிறப்பித்த உத்தரவில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில், நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கு, பட்டா வழங்கவும்,
ஆட்சேபனைக்குரிய புறம் போக்கு நிலத்தில் இருப்பவர்களை அகற்றி, அவர்களுக்கு தகுந்த இடத்தை கண்டறிந்து, பட்டா வழங்குவது குறித்தும் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கும், பச்சைக் கொடி
காட்டுகிறது. புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களையும், கோவில் நிலத்தை
ஆக்கிரமித்து இருப்பவர்களையும், சமமாக பார்க்க முடியாது. கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு, பட்டா வழங்குவது, அறநிலையத் துறை சட்டத்துக்கு எதிரானது; ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டி.ஆர்.ரமேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதற்கு, வருவாய் துறை தாக்கல் செய்த பதில் மனு:
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்தால், அந்த ஏழை குடும்பங்களின் நலனை பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்காக, கோவில் நிலத்தை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து, மாவட்ட வாரியாக, கோவில் வாரியாக திட்டம் வகுத்து, அரசுக்கு
அனுப்பப்படும்.அரசின் உத்தரவு பெற்று, வரன்முறை செய்யப்படும். வீடு இல்லாத
ஏழைகளுக்கு, வீட்டுவசதி அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.குறிப்பிட்ட நிலம் கோவிலுக்கு தேவைப்படவில்லை என்றால், தகுதியான ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க பரிசீலிக்கலாம். அதற்கான இழப்பீட்டு தொகை, சம்பந்தப்பட்ட கோவிலுக்கு வழங்கப்படும்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசாணைக்கு தடை கோரிய மனுக்களை, நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன்,
என்.சேஷசாயி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த
இடைக்கால உத்தரவு:ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்ய முயற்சிப்பதும், அதற்கு
ஒப்புதல் வழங்குவதும், கோவில் சொத்துக்களை இல்லாமல் ஆக்குவது போலாகும்.
கோவில் நலன்களுக்கு, தேவைக்கு அல்லாமல், அதன் சொத்துக்களுக்கு இழப்பு
ஏற்படுத்தும் எந்த செயலும், அறநிலையத் துறை சட்டத்துக்கு எதிரானது.

அனைத்து கோவில்களின் சொத்துக்களின் மீதான ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து, ஆய்வு செய்து முடியும் வரை, இந்த அரசாணையை அமல்படுத்த முடியாது. கோவில் நிலங்கள் தொடர்பான, இந்த அரசாணையின் ஒரு பகுதிக்கு, மறுஉத்தரவு வரும் வரை, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.அறநிலையத் துறையின் கீழ், எத்தனை கோவில்கள் வருகின்றன; அவற்றுக்கு சொந்தமான நிலங்களின் விபரங்களை, 'சர்வே' எண்ணுடன், விரிவான அறிக்கையாக, அறநிலையத் துறை ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும்.

எவ்வளவு பேர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர்; எப்போது முதல் ஆக்கிரமிப்பில் உள்ளன என்ற விபரங்களையும் அளிக்க வேண்டும்.கோவில் நிலங்களை ஆக்கிரமிக்காத
வகையில், நடவடிக்கை எடுக்கத் தவறிய துறை அதிகாரிகளுக்கு எதிராக, என்ன
நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசாணை ரத்து கோரிய பிரதான வழக்கின் விசாரணையை, 2020 ஜன.,20க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

மூலக்கதை