இந்தியா மீது நடவடிக்கை இல்லை: அமெரிக்கா சூசகம்
வாஷிங்டன் : ரஷ்யாவிடமிருந்துது எஸ்.400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குவதற்காக, இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்காது என தெரிகிறது.
இந்திய வான் பரப்பின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, ரஷ்யாவிடமிருந்து, அதி நவீன, எஸ் - 400 ஏவுகணைகளை வாங்க, மத்திய அரசு கடந்தாண்டு ஒப்பந்தம் செய்தது; இதன் மதிப்பு, 35 ஆயிரம் கோடி ரூபாய். இந்த ஏவுகணைகளை இந்தியா வாங்க அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை அமைப்பு, இந்தியா வந்தடையும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்த விவகாரத்தில், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படாததால், அது குறித்த பேச்சிற்குஇடமில்லை. இந்தியா தனது பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.
என்றாலும், ஒரு புறத்தில் ஆயுதங்களை கொடுத்துவிட்டு, மறுபுறுத்தில் ரஷ்யா உளவு பார்க்கத்துடிக்கும். இதனால், இந்தியா மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கசிவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி, எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கியுள்ள தருக்கி விவகாரத்தில், இந்தியா முற்றிலும் மாறுபடுகிறது எனக்கூறினார்.
இதனிடையே, கடந்த வாரம் இந்தியாவிற்கு, அதிநவீன எம்கே 45 கடற்படை துப்பாக்கிகளை வழங்குவதற்கு, அமெரிக்க அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதன் மதிப்பு ஒரு பில்லியன் டாலர் ஆகும்.
ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை துருக்கி வாங்கியதால், அந்நாட்டிற்கு வழங்கவிருந்த அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான எப்- 35 ரக போர் விமானங்களை வழங்க முடியாது என அமெரிக்கா தெரிவித்து விட்டது.