மரக் கன்று பரிசளித்த விக்ரம் ரசிகர்கள்
தமிழ்த் திரையுலகில் பெரிய நடிகர்கள் அல்லது முக்கிய நடிகர்களின் படங்கள் வெளிவரும் நாளன்று தியேட்டர்களில் அமர்க்களமான கொண்டாட்டங்கள் இருக்கும். தியேட்டர் வளாகங்களில் பேனர்கள் வைப்பது, தோரணங்கள் கட்டுவது, ஆட்டம், பாட்டம் என இருக்கும்.
சமீபத்தில் சாலை நடுவில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ அகால மரணமடைந்தது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது புதிய பட வெளியீட்டுக் கொண்டாட்டங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
தியேட்டர் வளாகங்களில் பேனர்கள் வைப்பதற்குப் பதிலாக நலத்திட்ட உதவிகள் செய்வதாக மாறியது. விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகயேன் ஆகியோரது படங்கள் வெளிவந்த போது அவர்களது ரசிகர்கள் பல உதவிகளைச் செய்தார்கள்.
இன்று விக்ரம் மகன் த்ருவ் நடித்த 'ஆதித்ய வர்மா' படம் வெளிவந்தது. படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சி சென்னை காசி தியேட்டரில் நடைபெற்றது. அப்போது விக்ரம் ரசிகர்கள் படம் பார்க்க வந்தவர்களுக்கு மரக் கன்றுகள், செடிக் கன்றுகள் ஆகியவற்றை பரிசாக அளித்தனர். அதே சமயம் சாலையில் பட்டாசு வெடித்ததை அவர்கள் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.