கனடாவில் அமைச்சரான தமிழ் பெண்
ஒட்டாவா, : வட அமெரிக்க நாடான கனடாவில், தமிழ் பெண் அனிதா இந்திரா ஆனந்த், 51, அமைச்சராக நியமிக்கப்பட்டுளளார். இதன் மூலம், கனடாவில் அமைச்சராகும் முதல் ஹிந்துவாகவும் அவர் உள்ளார்.கனடாவில், சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்று, ஜஸ்டின் த்ருடோ மீண்டும் பிரதமரானார். அவர், தன் அமைச்சரவையை நேற்று அறிவித்தார்.
கடந்த முறையைப் போலவே, இந்த முறையும், நான்கு இந்தியர்கள், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.அதில், அனிதா இந்திரா ஆனந்த், கனடாவில் அமைச்சராகும் முதல் ஹிந்து என்ற பெருமையைப் பெறுகிறார். மற்றவர்கள், சீக்கியர்கள்.தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.வி. ஆனந்த், பஞ்சாபைச் சேர்ந்த சரோஜ் ராம் தம்பதியின் மகளான அனிதா, கனடாவில் பிறந்தவர். சட்டக் கல்லுாரி பேராசிரியராக உள்ளார். அவர், முதல் முறையாக பார்லி.,க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது பொது சேவை மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.நான்கு குழந்தைகளின் தாயான அனிதா, கனடா வாழ் இந்தியர்கள் இடையே மிகவும் பிரபலமானவர்.
கடந்த, 2015ல், த்ருடோ அமைத்ததைப் போல, இந்த முறையும், அமைச்சரவையில், பாதிப் பேர் பெண்கள். அனிதா உட்பட, ஏழு பேர் புதுமுகங்கள்.அனிதாவைத் தவிர, அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள பார்திஷ் சாகர், ஹர்ஜித் சஜ்ஜன், நவ்தீப் பெய்ன்ஸ் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களான இந்தியர்கள். அதே நேரத்தில், கடந்த முறை அமைச்சராக இருந்த அமர்ஜீத் சோஹி, இந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.