கனடா அமைச்சரான முதல் தமிழ் இந்துப்பெண் அனிதா

தினமலர்  தினமலர்
கனடா அமைச்சரான முதல் தமிழ் இந்துப்பெண் அனிதா

டொரன்டோ : ஓக்வில் தொகுதி எம்.பி.,யான அனிதா ஆனந்த், கனடா அமைச்சரவையில் பொதுசேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனடா அமைச்சரவையில் இடம்பெறும் முதல் இந்துப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது கூடுதல் தகவல்.

கனடாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில், முதல் இந்து அமைச்சராக நியமிக்கப்பட்ட பெண்ணாக தனது பெயரை அவர் பதிவு செய்தார். டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியாக பணிபுரிந்த இவர், நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள கென்ட்வில் நகரில் பிறந்தவர். எனினும் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள வேலூரை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த்தின் தந்தை ஒரு டாக்டர். பெயர் சுந்தரம் விவேகானந்தன்.


நான்கு குழந்தைகளுக்கு தாயான அனிதா, ஓக்வில் பிராந்தியத்தில் உள்ள இந்தோ-கனடிய சமூகத்துடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். மேலும் கனடிய இந்து நாகரிக அருங்காட்சியகத்தின் முந்தைய தலைவராகவும் இருந்தார். பயங்கரவாதிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட ஏர் இந்தியா 182 விமானம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கான ஆய்வுகளையும் இவர் மேற்கொண்டார்.
புதிய ட்ரூடோ அரசாங்கத்திற்கான அமைச்சரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேரில் அனிதா ஆனந்த்தும் ஒருவர். இவர் தவிர மேலும் 3 இந்தியர்கள் கனடிய அமைச்சர்களாவர். இதில் அனிதா மட்டுமே இந்து. மற்ற அனைவரும் சீக்கியர்கள்.

மூலக்கதை