ஐதராபாத்தில் பரபரப்பு தயாரிப்பாளர் சுரேஷ்பாபு, நடிகர் வெங்கடேஷ் உட்பட 3 பேர் வீடுகளில் ஐடி சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்

தினகரன்  தினகரன்
ஐதராபாத்தில் பரபரப்பு தயாரிப்பாளர் சுரேஷ்பாபு, நடிகர் வெங்கடேஷ் உட்பட 3 பேர் வீடுகளில் ஐடி சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்

திருமலை: ஐதராபாத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்பாபு, நடிகர் வெங்கடேஷ் உட்பட 3 பேர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்பாபு வீடு மற்றும் அலுவலகம் ராமாநாயுடு ஸ்டூடியோ, சுரேஷ் புரோடக்சன்ஸ் நிறுவனம், சுரேஷ் பாபுவின் சகோதரரும் பிரபல தெலுங்கு நடிகருமான வெங்கடேஷ் வீடு  மற்றும் அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. பூபாலன்குடா டாலர் ஹில்ஸ் பகுதியில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். இதேபோன்று  பிரபல நடிகர் நானி வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. நானி சினிமா படப்பிடிப்புக்காக வெளியூர்  சென்றுள்ள நிலையில் அவரது வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சினிமா தயாரிப்பு செலவு மற்றும் அதன் மூலம் கிடைத்த  வருவாய் குறித்து அதிகாரிகள் விளக்கம் கேட்டு வருகின்றனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டது குறித்தும் அதற்கான ஆவணங்களை  பரிசீலித்தும் வருமானவரித்துறை  ஹார்ட்டிஸ்க்குகளை கைப்பற்றி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை 6 மணி முதல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் பல முக்கிய ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபு அவரது சகோதரர் வெங்கடேஷ் - நாகசைதன்யா இணைந்து நடிக்கக்கூடிய  வெங்கட் மாமா என்னும் படம் ₹200 கோடியில் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ராணா நடிப்பில் இரண்யகசிபு என்ற படமும், வெங்கடேஷ் நடிப்பில் அசுரன் திரைப்படமும் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே `ஓ பேபி’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டித் தந்தது. இதைத்தொடர்ந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் சுரேஷ்  புரோடக்சன் தயாரிப்பில் படம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் வருமான வரித்துறை சோதனை  நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை