தக்காளி மாலை: பாக்., மணப்பெண் 'டிரெண்டிங்'

தினமலர்  தினமலர்
தக்காளி மாலை: பாக்., மணப்பெண் டிரெண்டிங்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் தக்காளியால் ஆன மாலை, ஆபரணங்கள் அணிந்து வந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த படம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

பாக்.,ல் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து தக்காளி இறக்குமதி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.300 ஐ தாண்டியதால், சாமானிய மக்கள் தக்காளியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளி விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதனை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், பாக்.,கின் மோசமான பொருளாதார நிலையை சுட்டிக்காட்டும் வகையிலும், அந்நாட்டைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர், தங்க நகைகள் அணிவதற்கு பதிலாக தக்காளி நகைகளை அணிந்திருக்கிறார். கழுத்து, காது மற்றும் கைகளில் தக்காளியை கோர்த்து செய்யப்பட்ட நகையை அணிந்திருந்தார். தலையில் நெத்திச்சுட்டியாகவும் ஒரு தக்காளி அலங்கரித்திருந்தது. இவ்வாறு தங்கத்திற்கு நிகராக தக்காளியை ஒப்பிட்டிருந்த அவரது புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த மணப்பெண்ணிடம் உள்ளூர் செய்தியாளர் ஒருவர் பேட்டி எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் பேசும் மணப்பெண், தனது குடும்பத்தினர் தனக்கு திருமண சீதனமாக மூன்று கூடை தக்காளியை பரிசளித்திருப்பதாக கூறினார்.

மூலக்கதை