4 வார மருத்துவ சிகிச்சைக்காக நாளை லண்டன் செல்கிறார் நவாஸ்: லாகூர் உயர் நீதிமன்றம் அனுமதி

தினகரன்  தினகரன்
4 வார மருத்துவ சிகிச்சைக்காக நாளை லண்டன் செல்கிறார் நவாஸ்: லாகூர் உயர் நீதிமன்றம் அனுமதி

லாகூர்: உடல் நலம் குன்றிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 வார மருத்துவ சிகிச்சைக்காக நாளை லண்டன் செல்ல உள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவரது ரத்த தட்டணுக்களின் அளவு குறைந்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவரை சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அவரது பெயர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்ததால் வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.இதில் இருந்து அவரது பெயரை நீக்குவதற்கு, அவர் ரூ. 700 கோடி சொந்த ஜாமீன் தொகை செலுத்தவும், நாடு திரும்பிய பின் ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அரசு நிபந்தனை விதித்தது. இதனை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், 6 மணி நேர தொடர் விசாரணைக்கு பின் நீதிபதி பாகர் நஜ்பி தலைமையிலான அமர்வு, `பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் மியான் நவாஸ் ஷெரீப், அவரது மருத்துவர்களின் பரிந்துரைப்படி, 4 வார சிகிச்சைக்காக செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஷெரீப் நாளை லண்டன் செல்கிறார். தேவைப்பட்டால் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்கு அமெரிக்கா அழைத்து செல்லப்பட உள்ளார்.

மூலக்கதை