இளையராஜாவின் பாடல்களை இனி மேடையில் பாடுவேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிரடி

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இளையராஜாவின் பாடல்களை இனி மேடையில் பாடுவேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிரடி

இளையராஜா இசையமைத்த பாடல்களை இனி மேடையில் பாடுவேன் என எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த வருடம் இசையமைப்பாளர் இளையராஜா - பின்னணி பாடகர்  எஸ்.பி. பாலசுப்பிரமணியம்  இடையே காப்பிரைட் பிரச்சினை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. 
சினிமாவில்  50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணம் செய்து  இசைக் கச்சேரிகளை நடத்தினார். அப்போது  இளையராஜாவின் சார்பில் அவரது வக்கீல் பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சரண், பாடகி சித்ரா மற்றும்  கச்சேரியை நடத்திய ஒருங்கிணைப்பாளர்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். 
அதில் இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்பிரைட்  சட்டத்துக்கு எதிரானதாகிவிடும் என்றும் மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்றும்  குறிப்பிடப்பட்டிருந்தது. 
இதையடுத்து, இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டேன். பிற இசையமைப்பாளர்களின் இசையில் நிறைய பாடல்கள் பாடி இருக்கிறேன்.   அதனை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். 
உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி யாரும்  எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம் என அறிக்கை வெளியிட்டார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
இந்த நிலையில்  எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தற்போது ஐதராபாத்தில் பேட்டியளித்து உள்ளார். அவர் கூறியதாவது:
"எனக்கு நோட்டீஸ் அனுப்பிய பிரச்சினை இன்னும் ஓயவில்லை. எனக்கு ஏன் அவர் அப்படிச் செய்தார் எனத் தெரியாது. அவர் இசையமைத்த பாடல்களை மேடையில் பாடாமல் தான் இருந்தேன். பிறகுதான் யோசித்தேன். இளையராஜா இசையமைப்பில்தான் நான் அதிகப் பாடல்களைப் பாடியுள்ளேன். எனக்கும் அதில் பங்கு உள்ளது எனத் தோன்றியது. இப்போது மீண்டும் அப்பாடல்களைப் பாட ஆரம்பித்துவிட்டேன். அவர் என்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் நானும் சட்டப்படி பதில் சொல்ல முடிவெடுத்துள்ளேன். 
ஒரு நண்பனுக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது சரியல்ல. எந்தப் பாடலுக்கு அவருக்கு உரிமை உள்ளது என்பதை அவர் கூறவேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரு தெளிவு கிடைக்கும். 
இதெல்லாம் நடந்தாலும் அவர்மீது எனக்கு துளிக்கூட மரியாதை குறையவில்லை. ஓர் இசையமைப்பாளராக எப்போதும் அவரது காலைத் தொட்டுக் கும்பிடுவதற்குத் தயங்கமாட்டேன்." 
இவ்வாறு அவர் பேட்டியில் கூறியுள்ளார். 

மூலக்கதை