சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு

அல்பானி: 900 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை கடத்தி பதுக்கிய வழக்கில் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர், தீனதயாளன், அசோகன், சஞ்சீவி உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக கோவில்களில் இருந்து சிலைகளை கொள்ளையடித்து வெளிநாட்டில் விற்பனை செய்த வழக்கில் கைதாகி கடந்த 2012ம் ஆண்டு சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவனுக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இந்நிலையில் நியூயார்க் குற்றவியல் நீதிமன்றத்தில் அந்நாட்டு காவல்துறையினர் தொடர்ந்துள்ள வழக்கில் கபூரின் கூட்டாளிகள் சஞ்சீவி, அசோகன், ரஞ்சித் கன்பர், ஆதித்ய பிரகாஷ், ரிச்சர்ட் சாலமன்,  தீனதயாளன், வல்லவ பிரகாஷ், மேலேர் பெர்னிஷ்வித் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் இதை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான், கம்போடியா ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 2900 சிலைகள்  மற்றும் கலைப்பொருட்களை கடத்தி பதுங்கியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவற்றின் சர்வதேச மதிப்பு 900 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வழக்கில் அனைவரையும் கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து இவர்களில் சஞ்சீவி அசோகன், தீனதயாளன், சுபாஷ்கபூர் உள்ளிட்டோர் தமிழக சிறையில் உள்ளதால் அவர்களை இந்த வழக்கில் கைது செய்து நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமெரிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மூலக்கதை