இந்தியாவுக்கு 240 ரன் இலக்கு: வீரர்கள் அடுத்தடுத்து அவுட்
மான்செஸ்டர் : உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேற இந்திய அணிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் 'நம்பர்-1' அணியான இந்தியா, 4வது இடம் பிடித்த நியூசிலாந்தை சந்திக்கிறது.
'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் 28, வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து உதவினர். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
புதியதாக கொண்டு வரப்பட்ட 'ரிசர்வ் டே' விதிப்படி இன்று மீண்டும் போட்டி தொடர்ந்து நடக்கிறது. ராஸ் டெய்லர் (74), லதாம் (10), ஹென்றி (1) அடுத்தடுத்து அவுட்டாகினர். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.
240 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி, 5 ரன்கள் எடுத்த நிலையில் 3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்தது. வீரர்கள் சொற்ப ரன்களில், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.