நிதியமைச்சரின் அறிவிப்புக்கு பின்னணி காரணம் இதுதான்
புதுடில்லி:ஓராண்டில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல், ரொக்கமாக வங்கியிலிருந்து எடுத்தால், 2 சதவீதம், டி.டி.எஸ்., பிடிக்கப்படும் என, மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அமைச்சரின் இந்த முடிவுக்கு காரணமாக இருந்தவை குறித்து, தற்போது தகவல் வெளியாகியுள்ளது.ஓராண்டில், 448 நிறுவனங்கள், தலா 100 கோடி ரூபாய் க்கு மேல், வங்கியிலிருந்து, ரொக்கமாக எடுத்துள்ளன. இவை எடுத்துள்ள மொத்த தொகை, 5.56 லட்சம் கோடி ரூபாய்.
இரண்டு லட்சம் தனிநபர்கள் அல்லது வணிக நிறுவனங்களால், 2017- – 18ல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுக்கப்பட்டுள்ளது.
அப்படி எடுக்கப்பட்ட மொத்த தொகை மதிப்பு, 11.31 லட்சம் கோடி ரூபாய். 10 முதல் 100 கோடி ரூபாய் வரையிலான தொகையை 7, 300 பேர் எடுத்துள்ளனர். எனவே, இவர்களின் ரொக்க பரிவர்த்தனையை குறைத்து, வரி வருவாயை அதிகரிக்கவே நிதியமைச்சர் இந்த முடிவை எடுத்தார்.இவ்வாறு அரசு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.