அரசியல், ராணுவ உறவு நன்றாக இருந்தாலும், வர்த்தக உறவு சொல்லிக்கொள்ளும்படி இல்லை : இந்தியா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
அரசியல், ராணுவ உறவு நன்றாக இருந்தாலும், வர்த்தக உறவு சொல்லிக்கொள்ளும்படி இல்லை : இந்தியா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி விதிப்பதாக அந்த நாட்டின் அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். மேலும், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அவர் சமீபத்தில் நீக்கினார். அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே இரு தரப்பு அரசியல், ராணுவ உறவு நன்றாக இருந்தாலும், வர்த்தக உறவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினிய பொருட்களுக்கான வரியை, கடந்த ஆண்டு, 25 சதவீதம் அமெரிக்கா அதிகரித்தது.  இதனால், இந்தியாவின் உருக்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும், பாதாம், வால்நட் உள்ளிட்ட, 29 வகையான பொருட்கள் மீது, கூடுதல் வரி விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 28-ந் தேதி ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின்போது டிரம்பும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். அதில், வர்த்தக பிரச்சினைகள் குறித்து இருதரப்பு வர்த்தக மந்திரிகள் சந்தித்து பேசுவது என முடிவானது. இந்த நிலையில் இந்தியா மீது டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார். நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது” என கூறி உள்ளார்.

மூலக்கதை