இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: மதுரை வாலிபரிடம் என்ஐஏ அதிகாரிகள் விடிய விடிய விசாரணை...பரபரப்பு தகவல்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: மதுரை வாலிபரிடம் என்ஐஏ அதிகாரிகள் விடிய விடிய விசாரணை...பரபரப்பு தகவல்கள்

மதுரை: இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மதுரை வாலிபரிடம் ஐஎன்ஏ அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் அவரை கோவை அழைத்து சென்றனர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடித்து 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதையடுத்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தமிழகத்தில் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக கொச்சியை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் கடந்த 12ம் தேதி கோவையில் முகமது அசாருதீன் (32), சதாம் உசேன் (26), அக்ரம் ஜிந்தா (26), அபுபக்கர் (29), இதயத்துல்லா (38), இப்ராஹீம் (28) ஆகியோரது வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தி மொபைல் போன்கள், 29 சிம்கார்டு, 10 பென்டிரைவ், 300 ஏர் கன் புல்லட்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

பின்னர் ரேஸ்கோர்சில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். 6 பேரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இளைஞர்களை சேர்க்க மூளைச்சலவை செய்து, தமிழகம் மற்றும் கேரளாவில் சில இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், 6 பேருக்கும் முகமது அசாருதீன் தலைவராக செயல்பட்டதும் தெரியவந்தது.

இவர்களில், அசாருதீன் தனது முகநூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இலங்கை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாகவும், மனித வெடிகுண்டாகவும் செயல்பட்ட ஜஹ்ரான் ஹாஷிம் என்பவருடன் பேஸ்புக் நண்பராக இருந்துள்ளார். இதையடுத்து, முகமது அசாருதீனை கைது செய்து, கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த 6 பேர் அளித்த தகவலின்பேரில், கோவையில் உக்கடம் வின்சென்ட் சாலையை சேர்ந்த முகமதுஉசேன், ஷாஜகான், ஷேக் ஷபிபுல்லா ஆகிய 3 பேரை கோவை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இவர்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளையும், தீவிரவாத செயல்களையும் இளைஞர்களிடம் சமூகவலைதளங்கள் மூலமாக பரப்பி வந்ததும், கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதி பா. ஜ மூத்த தலைவர் அத்வானி தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்தபோது 9 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதுபோன்று, மீண்டும் ஒரு சதிச்செயலை கோவையில் அரங்கேற்ற திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக்’ மற்றும் சிரியா அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் என்பது தெரிய வரவே 3 பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை நேற்று காலை ரேஸ்கோர்ஸ் நீதிபதி குடியிருப்பில் உள்ள மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் முன் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 29ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக அசாருதீன் உள்ளிட்ட 6 பேர் கொடுத்த தகவலின்பேரில், சதாம், ஜனோபர் அலி, பெரோஸ்கான், முபின், உமர் பாரூக் ஆகிய 5 வாலிபர்களை என்ஐஏ அதிகாரிகள் பிடித்தனர்.

அவர்களில் சதாம் விடுவிக்கப்பட்டார். மற்ற 4 பேரில் ஜனோபர் அலி, பெரோஸ்கான், முபின் ஆகிய 3 பேரை கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்திலும், உமர் பாரூக்கை கோவையில் உள்ள என்ஐஏ அலுவலகத்திலும் வைத்து அதிகாரிகள் விசாரித்தனர்.

விசாரணையில், மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சதக் அப்துல்லா (27) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், நேற்றிரவு தேசிய புனலாய்வு பிரிவு போலீசார் மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் இருந்த சதக் அப்துல்லாவை சுற்றி வளைத்து பிடித்தனர்.

மேலும், அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

பின் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை