சோமாலியாவில் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல்: 12 பேர் பலி

தினகரன்  தினகரன்
சோமாலியாவில் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல்: 12 பேர் பலி

மோகாதிஷு: சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் இயங்கி வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் உள்ள பாராளுமன்றம் அருகே ஒரு பிரதான சாலையில் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 12 பேரும் அருகாமையில் உள்ள கென்யா நாட்டை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த சுமார் 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மூலக்கதை