காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு தலைவராக ராகுல் நீடிப்பார்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

தினகரன்  தினகரன்
காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு தலைவராக ராகுல் நீடிப்பார்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

புதுடெல்லி: ‘‘காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார்’’ என அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.  மக்களைவ தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி கடந்த மாதம் 25ம் தேதி நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார். அவரது பதவி விலகலை செயற்குழு  ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் ராகுலை தனிப்பட்ட முறையில் சந்தித்து சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும், ராகுல் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில்  கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், மூத்த தலைவர்கள் குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன்படி, அந்தோணி தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது.  இதில், மூத்த தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜூனா கார்கே, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜிவாலா, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ஆனந்த்  சர்மா ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட முக்கிய குழுவில் இடம் பெற்றிந்தவர்கள். கூட்டத்திற்கு பின் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதிய தலைவர் தேர்வு குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘‘கட்சியின் தலைவராக ராகுல்  இருந்தார்... இருக்கிறார்... இனியும் இருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட முக்கிய குழு கலைக்கப்பட்டு விட்டது. இன்றைய கூட்டத்தில் அடுத்து நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தல்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.  எனவே, தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களுக்கான பொதுச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட தீர்மானிக்கப்பட்டு உள்ளது. மக்களவை, மாநிலங்களவை கட்சி தலைவர் குறித்து சோனியா தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார். இதன் மூலம், ராகுல் தலைமை குறித்து கடந்த சில வாரங்களாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவர் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக மாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது. அதை அவரே விரைவில்  அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை