வங்கதேசத்திற்கு எதிரான போட்டி: 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்த 9வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் தமீம் இக்பால் 24, சவுமியா சர்க்கார் 25 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த முஸ்டபிகுர் ரகிம் 19 ரன்னில் ரன்அவுட் ஆக, முகமது மிதுன் 26, முகமதுல்லா 20 ரன்னில் வெளியேறினர்.
மறுபுறம் தனிநபராக போராடிய ஷாகிப் அல் ஹசன் 68 பந்தில் 7 பவுண்டரியுடன் 64ரன் எடுத்து கேட்ச் ஆக , முகமது சைபுதின் 29 ரன் எடுத்தார். 49. 2 ஓவரில் 244 ரன்னுக்கு வங்கதேசம் ஆல்அவுட் ஆனது.
நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 4, டிரென்ட் போல்ட் 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 245 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது.
14 பந்தில் 25 ரன் எடுத்து மார்ட்டின் கப்டில், சாகிப் அல்ஹசன் பந்தில் ஆட்டம் இழக்க மற்றொரு தொடக்க வீரர் முன்ரோ 24 ரன்னில் கேட்ச் ஆனார். கேப்டன் வில்லியம்சன் தனது பங்கிற்கு 40 ரன் எடுத்தார்.
பின்னர் வந்த லதாம் 0, ஜேம்ஸ் நீஷம் 25, கிராண்ட்ஹோம்ப் 15, ஹென்றி 6 ரன்னில் பெவிலியன் திரும்பினர். அரைசதம் விளாசிய ரோஸ் டெய்லர் 91 பந்தில் 9 பவுண்டரியுடன் 82 ரன் எடுத்தார்.
47. 1 ஓவரில் நியூசிலாந்து 8 விக்கெட் இழந்து 248 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மிட்செல் சாண்ட்னர் 17 , லாக்ஸி பெர்குசன் 4 (3) ரன்னில் களத்தில் இருந்தனர்.
வங்கதேச தரப்பில் மெஹிதி ஹசன், ஷகிப் அல்-ஹசன், மொசாடெக் ஹூசைன், மொகமது சைபுதின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்தின் ரோஸ் டெய்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இருந்த நியூசிலாந்திற்கு இது 2வது வெற்றியாகும். வங்கதேசம் தனது முதல் போட்டியில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி இருந்த நிலையில் நேற்று முதல் தோல்வியை சந்தித்தது.