சவும்யா நல்ல துவக்கத்தை தந்தார்: மஷ்ரஃபே மோர்டாசா பேட்டி
லண்டன்: ‘சவும்யா சர்க்கார் நல்ல துவக்கத்தை தந்தார்’ என்று வங்கதேச அணியின் கேப்டன் மஷ்ரஃபே மோர்டாசா தெரிவித்தார். லண்டன், ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா-வங்கதேச அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களை குவித்தது. சவும்யா சர்கார் 42 ரன், ஷாகிப் ஹசன் 75 ரன், முஷ்பிகர் 78 ரன் விளாசினர். மகமதுல்லா 46 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் பெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 331 ரன் என்ற கடின இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மார்க்ராம் 45 ரன், கேப்டன் டூ பிளெஸ்சி 62 ரன், மில்லர் 38 ரன், துஷேன் 41 ரன், டுமினி 45 ரன்கள் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
வங்கதேச கேப்டன் மஷ்ரஃபே மோர்டாசா கூறுகையில், ‘‘டாஸ் வென்ற போது முதலில் பேட்டிங் செய்வதா அல்லது பந்து வீசுவதா என்ற குழப்பம் ஏற்பட்டது.
சரி. முதலில் பேட்டிங் செய்வது என்று முடிவெடுத்தோம்.
சவும்யா சர்க்கார் நல்ல துவக்கத்தை தந்தார். முஷி ரஹீம், சாஹிப், மகமதுல்லா, மொசாடெக் சிறப்பாக ஆடினர்.
பவுலர்கள் முஷ்டாபிசூர், சைபுதீன் நன்றாக பந்து வீசினர். ஸ்பின் பவுலர்களும் சிறப்பாக பந்து வீசினர். அடுத்து நடக்க உள்ள போட்டிகளிலும் சிறப்பாக ஆடுவோம் என்று நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்கா கேப்டன் டூ பிளெஸ்சி கூறுகையில், ‘‘‘நாங்கள் திட்டமிட்டபடி போட்டி அமையவில்லை.
330 ரன் என்பது பெரிய இலக்கு. காயம் காரணமாக லுங்கி நிகிடியின் பந்துவீச்சு எடுபடவில்லை.
எங்கள் அணி உலக தரம் வாய்ந்த அணி.
எங்களது திறமை இன்று வெளிப்படவில்லை. ஆனால் அடுத்து வரும் போட்டிகளில் வெளிப்படுத்துவோம்’’ என்று உறுதியுடன் தெரிவித்தார்.