பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் வரும் 22-ந் தேதி விண்ணில் செலுத்தப் படுகிறது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ரேடார் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ரிசாட் 2 பி-யை தாங்கியபடி பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் வரும் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வெளியிட்டு உள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்து உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து அன்று காலை 5.27 மணிக்கு அந்த ராக்கெட்டை ஏவத் திட்டமிடப்பட்டு உள்ளது.

 அதற்கான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் ஏறத்தாழ நிறைவு அடைந்திருப்பதாகவும், விரைவில் கவுண்ட் டவுன் தொடங்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த ஆண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்படும் 3-ஆவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ரிசாட் 2-பி செயற்கைக்கோளானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

ரேடார் தொழில்நுட்பத்தில் புவிப் பரப்பை படம் எடுக்கும் பணிகளில் அந்த செயற்கைக்கோள் ஈடுபடுத்தப்பட உள்ளது. ரிசாட் 2-பி செயற்கைக்கோளில் உயர் தொழில்நுட்பத்தினால் ஆன அதி நவீன இமேஜிங் சாதனம் உள்ளது.

அதன் மூலமாக, புவியின் கீழ்ப்பரப்பில் உள்ளவற்றை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ரிசாட் 2-பி செயற்கைக்கோளானது 555 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட  உள்ளது. இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் செயற்கைக் கோள்களை பொதுமக்கள் நேரடியாக காணும் வசதி அண்மையில் ஏற்படுத்தப்பட்டது.

இதற்காக திறந்தவெளி அரங்கு ஒன்றும் கட்டப்பட்டது. சுமார் 5 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய அந்த அரங்கில் இருந்து பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதற்கான ஆன்லைன் முன்பதிவு ராக்கெட் ஏவப்படுவதற்கு 5 நாட்கள் முன்பு தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

மூலக்கதை