ஜம்மு காஷ்மீரில் சிந்துநதியின் மேலே புதிதாக கட்டப்பட்ட தொங்குபாலம் திறந்து வைப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிந்துநதியின் மேல் புதிதாக கட்டப்பட்ட தொங்கு பாலம் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. 

ஜம்மு காஷ்மீரின் லே என்ற இடத்தில் உள்ள சோக்லம்ஸர் கிராமத்தில் சிந்து நதியின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் சுமார் 260 அடி நீளம் கொண்டதாகும். 

இந்த தொங்கு பாலத்தை இந்திய ராணுவத்தின் ஃபயர் அன்ட் ஃப்யூரி பிரிவினர் 40 நாட்களில் அமைத்து சாதனை படைத்து உள்ளனர். புதுமையான பொறியியல் முறைகள் மூலம், 500 டன் உபகரணங்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பாலம், நடுவில் தூண்கள் ஏதுமின்றி கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. லே-லடாக் பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே உறவை மேம்படுத்தும் வகையில் இந்த பாலத்திற்கு மைதிரி பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த பாலத்தை கட்டி முடித்த ராணுவ வீரர்கள் இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து உள்ளனர். இந்த மைத்ரி பாலத்தை 89 வயதான ஓய்வு பெற்ற போர் வீரர் நெயிக் ஃபுங்சுக் ஆங்டஸ் திறந்து வைத்தார். 

சோக்லம்ஸர், ஸ்டோக் மற்றும் சுச்சோட் ஆகிய மூன்று பகுதி மக்களும் உதவும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அனைவரும் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். 

மூலக்கதை