மிகப்பெரிய ஏமாற்றம்-ஸ்ரேயாஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மிகப்பெரிய ஏமாற்றம்ஸ்ரேயாஸ்

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிராக இலக்கை துரத்தி ஆடிய போது, வலுவான நிலையில் இருந்து, திடீரென தோல்வியடைந்தது மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது என டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மொகாலியில் நேற்று நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்ெகட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. டேவிட் மில்லர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.

167 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லி அணி, 16. 3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் சாம் கரண் வீசிய பந்தில் நன்கு ஆடிக்கொண்டிருந்த இன்கிராம் (38 ரன்கள்) அவுட் ஆனார்.

அதன் பின்னர் டெல்லி அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன. கடைசி 8 ரன்களில் அந்த அணியின் 7 விக்கெட்டுகள் வீழ்ந்தன.



சாம் கரண் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை ஹாட்ரிக் சாதனையுடன் வீழ்த்தி அணியின் திடீர் வெற்றிக்கு காரணமானார். போட்டி குறித்து டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், ‘‘மிகப் பெரிய ஏமாற்றம்.

எனக்கு பேச்சே வரவில்லை. அவ்வளவு மோசமாக ஆடினார்கள் எங்கள் அணியின் பேட்ஸ்மென்கள்.

எங்கள் அணியின் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லாமே மோசமாக இருந்தது. பஞ்சாப் வீரர்கள் பதற்றமே இல்லாமல், மிகவும் நிதானமாக விளையாடினார்கள்’’ என்று தெரிவித்தார்.

பஞ்சாப் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில், ரிஷப் பன்ட் விக்கெட்டை குறி வைத்து வீழ்த்தினோம்.

3 ஸ்பின் பவுலர்களும் சிறப்பாக பந்து வீசினர்’’ என்றார்.

.

மூலக்கதை