2030-ம் ஆண்டிற்குள் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் : பிரதமர் நம்பிக்கை

தினகரன்  தினகரன்
2030ம் ஆண்டிற்குள் உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் : பிரதமர் நம்பிக்கை

டெல்லி: வரும் 2030-ம் ஆண்டிற்குள் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெட்ரோலியம், எரிவாயு தொடர்பாக 3 நாட்கள் நடைபெறும் பெட்ரோடெக்-2019 மாநாட்டை, பிரதமர் மோடி டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் தொடங்கி வைத்தார். 70 நாடுகளை சேர்ந்த 7000 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி,உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். எரிசக்தி நீதி என்பதற்கு மத்திய அரசு முதல் முன்னுரிமை கொடுத்து வருவதாகவும், தனக்கும் அதுவே முக்கியமான இலக்கு என்றும் குறிப்பிட்டார். ஐஎம்ஏ, உலக வங்கி போன்ற முக்கிய நிறுவனங்கள் இந்தியாவில் திட்டங்கள் தொடங்க தொடர்ந்து முன்வருகின்றன. உலக பொருளாதாரம் மந்தமான சூழ்நிலையில் இருந்த போதிலும், இந்திய பொருளாதாரம் நிலையாக இருந்தது.உலகின் 6வது மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை சமீபத்தில் இந்தியா எட்டியதை சுட்டிக்காட்டினார். எரிசக்தி நீதியை நிலைநாட்ட மத்திய அரசு பல்வேறு கொள்கைகளை வகுத்து செயல்படுத்தியிருப்பதாகவும், அதன் மூலமே அனைத்து ஊரகப் பகுதிகளுக்கும் மின்சார வசதி சென்று சேர்ந்திருப்பதாகவும் கூறினார். ஆண்டுதோறும் இந்தியாவில் மின்தேவை 5 சதவீதம் அதிகரித்து வருகிறது. இதனால் உலகின் மின் நுகர்வோர் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மலிவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகளின் சங்கமம், நீடித்த வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி விரைவுபடுத்தும். 2040-ம் ஆண்டு வாக்கில் நாட்டின் எரிசக்தித் தேவை இருமடங்காகும் என குறிப்பிட்ட மோடி, அத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சாதகமான சந்தையாக இந்தியா இருப்பதாகவும் கூறினார். ல்பிஜி இணைப்புகளின் அளவு 5 ஆண்டுகளுக்கு முன்னர் 55 சதவீதமாக இருந்தநிலையில், தற்போது 90 சதவீதத்தை கடந்திருப்பதாக குறி்ப்பிட்டார்.

மூலக்கதை