காணாமல்போனோர் பணியக உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
காணாமல்போனோர் பணியகத்துக்கான உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கு, அரசியலமைப்பு பேரவையினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கடந்த ஜூலை மாதம் சிறிலங்கா அதிபரின் கையெழுத்துடன், வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
எனினும், காணாமல்போனோர் பணியகத்தின் உறுப்பினர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் இழுபறி நிலை நீடித்து வந்தது.
இதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அரசியலமைப்புப் பேரவை சிறிலங்காவின் மும்மொழி நாளிதழ்களிலும் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
அரசியலமைப்பு பேரவையின் பதில் செயலாளர் நாயகத்தினால் செய்யப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு அமைய, நொவம்பர் 6ஆம் நாளுக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள், உண்மை கண்டறிதல் அல்லது விசாரணைகள், மனித உரிமைகள் சட்டம், அனைத்துலக சட்டம், மனிதாபிமான செயற்பாடுகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும், அல்லது காணாமல் போனோர் பணியகத்தின் பணிகளை நிறைவேற்றுவதுடன் தொடர்புடைய வேறு தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!