மனித உரிமை மீறல்களுக்கு முதன்முறையாக கண்டனம் தெரிவித்த ஆங் சான் சூகி!

என் தமிழ்  என் தமிழ்
மனித உரிமை மீறல்களுக்கு முதன்முறையாக கண்டனம் தெரிவித்த ஆங் சான் சூகி!

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்க முடியாது. இதன் அடிப்படையில், ஜனநாயகத்துக்கான தேசிய கட்சியின் தலைவரான ஆங் சான் சூகி, இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, அவர் தனது ஆதரவாளர்களும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை சூகி களம் இறக்கினார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ்(67) மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆங் சான் சூகி அரசு ஆலோசகராக இருந்து வருகிறார்.

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமாகி உள்ளது.

மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 3.70 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடந்த வாரம் கண்டனம் தெரிவித்தார். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மியான்மர் நாட்டின் ரக்கினே மாநிலத்தில் பாதுகாப்பு, மனிதநேயம், மனித உரிமைகள் சீரழிந்து வருவதாக குறிப்பிட்டுள்ள அன்டோனியோ, வறுமையின் பிடியில் சிக்கியுள்ள ரகினே மாநிலத்தில் வாழ்பவர்கள் நீண்டகாலமாகவே அநீதியான முறையில் நடத்தப்படுவதை அறிந்து வேதனை அடைவதாக குறிப்பிட்டார்.

மியான்மரில் ஜுன்டா எனப்படும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக போராடி வீட்டுச்சிறையில் அவதிப்பட்டு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தனது ஆலோசனையின் பேரில் நடைபெற்றுவரும் மியான்மர் அரசை ஆங் சான் சூகி தட்டிக் கேட்காதது ஏன்? என உலகின் பல நாடுகளின் தலைவர்களும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், மியான்மரில் ராணுவத்தின் ஒடுக்குமுறை தாக்குதல் தொடங்கி கடந்த 25 நாட்களில் இதுவரை சுமார் 5 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர். குறிப்பாக, வங்காளதேசம் நாட்டில் மட்டும் 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மியான்மரின் ரக்கினே மாநிலத்தில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவ ஆட்சிக்கு நிகரான அடக்குமுறைகள் தொடர்ந்த நிலையில் ஆட்சியின் தலைமை ஆலோசகர் என்ற முறையில் இதுவரை கருத்து கூறுவதை தவிர்த்துவந்த ஆங் சான் சூகி, தற்போது இவ்விவகாரம் தொடர்பாக முதன்முறையாக திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

அங்கு நடந்துவரும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாக தெரிவித்துள்ள அவர், ரக்கினே மாநிலத்தில் நிகழ்ந்த அத்துமீறல்களுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை