‘வெள்ளவத்தை கட்டிட உரிமையாளர் சரண்’

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
‘வெள்ளவத்தை கட்டிட உரிமையாளர் சரண்’

கொழும்பு-06 வெள்ளவத்தையில், இடிந்துவிழுந்த 5 மாடி கட்டிடத்தின் உரிமையாளர், தன்னுடைய சட்டத்தரணியின் ஊடாக, சனிக்கிழமை இரவு 7 மணியளவில் சரணைந்துள்ளார் என்று வௌ்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.   

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் அ​வரை கைது செய்துள்ள பொலிஸார், அவரை கல்கிஸ்ஸை நீதிமன்ற நீதவான் முன்னிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தினா்.

இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 26ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  

வெள்ளவத்தை, சவோய் திரையரங்குக்கு, அருகிலுள்ள ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டிடம், கடந்த வியாழக்கிழமை காலை வேளையில் இடிந்து வீழ்ந்தது.   

இவ்வனர்த்தத்தினால்,  பெண்ணொருவர் உட்பட மூவர் உயிரிழந்ததுடன் 21 பேர் காயமடைந்திருந்தனர். மொரட்டுவையைச் ​சேர்ந்த பெண்ணின் சடலம், நேற்று மாலை 5.30க்கு மீடகப்பட்டது என  மீட்புக்குழுவினர் அறிவித்தனர்.   

சம்பவம் இடம்பெற்ற தினத்திலிருந்து, அக் கட்டிடத்தின் உரிமையாளர் தலைமறைவாகி இருந்தார். எனினும், தன்னுடைய சட்டத்தரணியின் ஊடாக அவர், சனிக்கிழமையன்று சரணடைந்துள்ளார்.  

அவ்வாறு கைது செய்யப்பட்டவர், வெள்ளவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 62 வயது நபர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  

சரிந்து விழுந்த அந்தக் கட்டிடமானது, முறையான தர நிலையில் கட்டப்படவில்லை என்று தேசிய கட்டட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.   

மூன்று மாடிகளை கொண்ட கட்டத்துக்கான அனுமதியை பெற்றுகொண்டு, ஐந்து மாடிகளைக் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால், அக்கட்டிடம் இடிந்து விழுந்துவிட்டதாக அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை