வங்கிகளின் வாராக்கடனுக்கு தீர்வு; விரைவில் புதிய திட்டம் அறிமுகம்
புதுடில்லி : மத்திய நிதி அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன், 6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், வங்கிகளின் சொத்து மதிப்பு பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. வாராக்கடன் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண, மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, புதிய கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ, புதிய கொள்கை வெளியிடப்படும்.
வங்கிகளின் மொத்த வாராக்கடனில், பெரிய நிறுவனங்களின் பங்கு, 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதிலும், 40 – 50 நிறுவனங்களிடம் தான், பெரும் தொகையை வசூலிக்க வேண்டியுள்ளது.அதனால், சில சலுகைகள் அளித்து, ஒரே தவணையில் கடனை வசூலிப்பது உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களை கொண்டதாக, புதிய கொள்கை இருக்கும் என, தெரிகிறது.வாராக்கடன் வசூலிப்பிற்கான தெளிவான வழிகாட்டுதலை, இக்கொள்கை வழங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.