மீளவும் திறக்கப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எதிர்வரும் மாதம் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான ஓடுத்தளத்தின் புனரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் நவீன சமிக்ஞை கட்டமைப்பை பொருத்துதல் ஆகிய பணிகள் தற்போது நிறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தின் பிரதான சிவில் பொறியியலாளர் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 5 ஆம் திகதி விமான நிலையத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகள் நிறைவு செய்யப்பட உள்ளன.
இதன் பின்னர் எதிர்வரும் 6 ஆம் திகதியில் இருந்து சர்வதேச விமான சேவைகள் வழமைப் போல் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
720 கோடி ரூபா செலவில் கடந்த ஜனவரி மாதம் விமான நிலையத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதேவேளை குறித்த பணிகளை இரண்டு சீன நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.