தினகரனுக்கு எதிராக திரளும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

தினமலர்  தினமலர்
தினகரனுக்கு எதிராக திரளும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரனுக்கு எதிராக, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும், மீனவர்களும் ஓட்டளிக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து, மீனவர் சங்க வட்டாரங்கள் கூறியதாவது:ஆர்.கே.நகர் தொகுதியில், வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு, மீனவர்களின் ஓட்டுகள் உள்ளன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மெரினாவில், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள், சசிகலாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், குளிக்கவும், பாத்ரூம் போகவும், மீனவர்கள் உதவினர்.

அந்த போராட்டம், கலவரமாக மாறிய போது, சமூக விரோதிகளால், மீனவர்களின் குடிசைகள், கடைகள் தீ வைக்கப்பட்டன. பல மீனவர்களை, போலீசார் கைது செய்தனர். இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மீனவர்களுக்கு, உடனடியாக அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை.

இதற்கு, முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை செயல்படாமல் தடுத்த, சசிகலா தரப்பினரே காரணம். எனவே, சசிகலா அணியைச் சேர்ந்த தினகரனுக்கு எதிராக, ஆர்.கே.நகரில் வசிக்கும் மீனவர்கள் ஓட்டளிப்பர். மெரினா கலவரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், தினகரனுக்கு எதிராக, அங்கு பிரசாரம் செய்வர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

மூலக்கதை