நடுவானில் குட்டிக்கரணம் அடித்து அதிர்ச்சியை ஏற்படுத்திய விமானம்!

PARIS TAMIL  PARIS TAMIL
நடுவானில் குட்டிக்கரணம் அடித்து அதிர்ச்சியை ஏற்படுத்திய விமானம்!

 நடுவானில் பறந்த அதிவேக சூப்பர் ஜம்போ ஜெட் விமானத்தின் அழுத்தத்தால் அதை கடக்க முயன்ற சிறிய விமானம் ஒன்று குட்டிக்கரணம் அடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ரக சூப்பர் ஜம்போ ஜெட் ஏர்பஸ் A380-800 விமானம் ஒன்று சம்பவத்தின்போது ஐக்கிய அமீரகம் துபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
 
குறித்த விமானமானது அரபிக்கடலின் மீது சுமார் 34 ஆயிரம் அடி உயரத்தில் ஓமன் தலைநகர் மஸ்கட் நகரில் இருந்து சுமார் 630 கடல் மைல்கள் தூரத்தில் உள்ள வான் எல்லையில் பறந்துகொண்டிருந்தது.
 
அப்போது, மாலத்தீவில் இருந்து துபாய் நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஒரு சிறியரக பயணிகள் விமானம் இரட்டை அடுக்கு இருக்கை வசதி கொண்ட அந்த ஜெட் ஏர்பஸ் விமானத்தை நெருங்கியுள்ளது.
 
அப்போது ஜெர்மனி நாட்டை சேர்ந்த அந்த சிறிய விமானம், ஜெட் ஏர்பஸ் பயணிகள் விமானத்தை கடக்க முயன்றது. இதில், ஜெட் விமானத்தின் கீழ் எழுந்த ஒரு அழுத்தத்தால் குறித்த குட்டி விமானம் 5 முறை குட்டிக்கரணம் அடித்து சுமார் 10 ஆயிரம் அடிவரை கீழ் நோக்கி சென்றதாகவும் அதில் இருந்த 9 பயணிகள் காயமடைந்ததாகவும் தற்போது தெரியவந்துள்ளது.
 
கடந்த ஜனவரி மாதம் 7-ம் திகதி நடைபெற்ற இந்த விபத்தையடுத்து அந்த சிறிய விமானம் அருகாமையில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. காயமடைந்த பயணிகள் அனைவருக்கும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் படுகாயம் அடைந்த ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
வழக்கமாக, கடல் நீரை கிழித்தபடி வேகமாக செல்லும் படகுகள் நீரில் காற்றலை போன்ற சுழல்களை ஏற்படுத்துவதுபோல், வளிமண்டலத்தை ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் அதிவேகமாக பறக்கும்போது விமானங்களில் இருந்து ஒருவிதமான சுழற்காற்று போன்ற எதிர்வீச்சு ஏற்படுவதுண்டு.
 
வானூர்தி அறிவியலின்படி, ‘டர்புலன்ஸ்’ என்றும் ‘ஜி-போர்ஸ்’ என்றும் அழைக்கப்படும் இந்த சுழற்காற்றில் அவ்வழியாக கடந்து செல்லும் சில விமானங்கள் சிக்கித் திணறிய வரலாறு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

 

மூலக்கதை