மனைவி கண்முன்னே துடிதுடிக்க லாரி உரிமையாளர் வெட்டிக்கொலை: கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்
கும்மிடிப்பூண்டி- கும்மிடிப்பூண்டி அருகே லாரி உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மனைவி கண்முன்னே துடிதுடிக்க இந்த சம்பவம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சுறாபள்ளம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (35). இவர் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தார்.
இவரது மனைவி ராஜேஸ்வரி (28). தம்பதியினர் இன்று காலை 9 மணியளவில் பனங்காட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சாமி கும்பிட பைக்கில் சென்றனர்.
தரிசனம் முடித்துவிட்டு காலை 10 மணியளவில் பனங்காடு அருகே உள்ள சோதனைச்சாவடி வழியாக வீடு திரும்பினர். அப்போது 3 பைக்குகளில் முகத்தை கர்ச்சீப்பால் மறைத்துக்கொண்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் பன்னீர்செல்வத்தின் பைக் மீது இடித்தனர்.
இதில் இருவரும் கீழே விழுந்தனர்.
அப்போது அக்கும்பல் பன்னீர்செல்வத்தை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
அவர்களிடம் இருந்து உயிர்பிழைக்க பன்னீர்செல்வம் ஓடினார். ஆனால் கும்பல், விரட்டிச் சென்று வெட்டியது.
இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணவர் உடலை பார்த்த மனைவி கதறி துடித்தார்.
அப்பகுதியில் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் மாவட்ட போலீஸ் எஸ்பி சாம்சன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பன்னீர்செல்வம் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பன்னீர்செல்வத்தை வெட்டிக்கொலை செய்த கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.
.