2019 உலக கோப்பைக்கு பின்னரும் விளையாட டோனி விருப்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
2019 உலக கோப்பைக்கு பின்னரும் விளையாட டோனி விருப்பம்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி, 2019ம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பின்னரும் கிரிக்கெட் விளையாட விருப்பம் தெரிவித்து ஓய்வு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் டோனி.   கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, ஒருநாள் மற்றும் டி. 20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஒருநாள் மற்றும் டி. 20 கேப்டன்பதவியில் இருந்து விலகினார். இருப்பினும் ஒரு வீரராக அணியில் நீடிக்கிறார்.

தற்போது 35 வயதான டோனியின் கிரிக்கெட் எதிர்காலம் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி சாம்பியன் டிராபி (மினிஉலக கோப்பை) தொடருக்கு பின் முடிவுக்கு வரும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் பேட்டி அளித்த டோனி, தற்போதைய உடல் தகுதி நிலையில், 2019ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னரும் தொடர்ந்து விளையாட முடியும் என கூறினார்.

இதன்மூலம் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு டோனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


.

மூலக்கதை