சத்தமின்றி வெளியான ‛பாம்பு சட்டை'

தினமலர்  தினமலர்
சத்தமின்றி வெளியான ‛பாம்பு சட்டை

இன்றைக்கு ஒரு படம் ரிலீஸாகிறது என்றால் அந்தப்படத்திற்கான புரொமோஷன் பணிகள் சுமார் 1 மாதத்திற்கு முன்பே துவங்கிவிடும். பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம் இரண்டு மாதத்திற்கு முன்பே கூட படம் பற்றி தினம் ஒரு தகவல்களை கொடுத்து, அந்தப்படம் பற்றிய செய்திகளை லைம்-லைட்டில் வைத்து கொள்வார்கள். அப்படியிருக்கையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், நடித்த ‛பாம்பு சட்டை' படம் சத்தமின்றி ரிலீஸாகி உள்ளது.

சதுரங்க வேட்டை கொடுத்த வெற்றியால் அப்படத்தை தயாரித்த மனோபாலா, பாம்பு சட்டை என்ற படத்தை ஆரம்பித்தார். பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்தனர். அறிமுக இயக்குநர் ஆடம்தாசன் இயக்கினார். இப்படம் ஆரம்பித்த சில மாதங்களிலேயே பஞ்சாயத்து. நிதி நெருக்கடி பிரச்னை, ஹீரோ பாபியால் பிரச்னை, சென்சாரில் பிரச்னை என ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்தது. சுமார் இரண்டு - மூன்று மாதங்களாகவே படம் வருமா... வராதா... என்று இழுபறி நீடித்து வந்த நிலையில் சந்தமின்றி இப்படம் ஒரு வழியாக இன்று ரிலீஸாகிவிட்டது.

பாம்பு சட்டை படம் ரிலீஸாகிறது, என்று கடந்த சில தினங்களாக பேப்பர்களில் விளம்பரம் மட்டுமே வந்தன. ஆனால் படம் பற்றி ஹீரோவோ, ஹீரோயினோ, இயக்குநரோ உள்ளிட்ட யாரும் வாய் திறக்கவில்லை. தயாரிப்பாளர் மனோபாலா மட்டும் இன்று படம் வெளியானதும், ‛‛மிகப்பெரிய போராட்டத்துக்கு பிறகு என் படம் பாம்பு சட்டை வெளிவந்து விட்டது, வெற்றி பெற உங்கள் ஆசிகள்'' என்று தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை